பெங்களூரில் பெண்களை கிண்டல் செய்த நபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்
பெஙகளூர்: பெங்களூரில் பொது இடத்தில் பெண்களை கிண்டல் செய்த நபரை மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
பெங்களூர் ஜே.பி. நகரில் வாலிபர் ஒருவர் பொது இடத்தில் பெண்களை கிண்டல் செய்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து நொறுக்கினர். தர்ம அடி வாங்கிய அந்த நபர் மயங்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இது குறித்து நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள தகவல்,
அடிவாங்கிய நபர் யார் என்று தெரியவில்லை. அவர் தற்போது பேசும் நிலைமையில் இல்லை. அவரது பெயர் புனித் என்று சிலர் கூறுகிறார்கள். அவரை தாக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோதக் சகோதரிகளை பார்த்துவிட்டு நாமும் செய்தியில் இடம்பிடிக்க வேண்டும் என்று மக்கள் இவ்வாறு இரக்கமின்றி தாக்கியுள்ளனர் என்றனர்.
மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் கனகபுரா ரோடு அருகே உள்ள சாரக்கியில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து அடித்ததாக ஒருவர் ரெட்டிட்டில் போஸ்ட் செய்துள்ளார்.
அடிவாங்கியவர் யாரையோ பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இது பற்றி செய்தியும் வெளியாகவில்லை. ஒரே குழப்பமாக உள்ளது என்று அந்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.