விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: மோடி குற்றச்சாட்டு

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. அதனையடுத்து காங்கிரஸ் ஆளும் மாநிலத்தின் முதல்வர்களுக்கான கூட்டத்தை சில தினக்களுக்கு முன் கூட்டினார் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி.
அக்கூட்டத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழலை தடுக்கும் வகையில் லோக் அயுக்தாக்களை அமைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையில் மலிவு விலை கடைகளை அமைப்பது குறித்தும் உத்தரவிட்டார். மேலும், ஆதர்ஷ் ஊழல் தொடர்பான நீதி விசாரணை அறிக்கையை மராட்டிய மாநில அரசு நிராகரித்ததற்கு ராகுல் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், மத்திய அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது:-
பழங்காலத்தில் தங்களைச் சுற்றிலும் நடப்பதை மக்கள் கண்டுகொள்ளாமல், இருந்தபோது 'அசரீரி' குரல் கேட்டது. இப்போதும் அப்படி 'அசரீரி' ஒலிக்கிறது. முதல்-மந்திரிகள் இதைச் செய்யுங்கள். முதல்-மந்திரிகள் அதைச் செய்யுங்கள் என்று 'அசரீரி' வருகிறது. ஆனால் ஊழலில் தொடர்பு உடையவர்கள் இதைச் சொல்கிறார்கள். 'அசரீரி' குரலை ஒலிக்கிறவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் எப்படி வளர்ந்தது என்பதை சொல்லட்டும்.
மத்தியில் பதவியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, நாட்டுக்கு சுமையாகி விட்டது. மக்களுடனான தொடர்பை அது இழந்து விட்டதால், நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி, அதன் அரசுகள், தலைவர்கள் மக்களின் குரல்களுக்கு செவி சாய்ப்பது கிடையாது. இன்று மக்கள் விரும்புவது வளர்ச்சியைத்தானே தவிர பிரிவினையை அல்ல. அவர்கள் நாடுவது வாய்ப்புகளைத்தான். வகுப்புவாத விஷத்தை அல்ல.
3 வருடங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வை தடுப்பது பற்றி பிரதமர் ஒரு கூட்டத்தை கூட்டினார். விலைவாசி உயர்வை தடுப்பது தொடர்பான சிபாரிசுகளை செய்யும் ஒரு குழுவுக்கு என்னை தலைவராக நியமித்தார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி முதல்வர் 2 பேர் அதில் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் நடவடிக்கை எடுக்கத்தக்க விதத்தில் 62 அம்சங்களை தெரிவித்திருந்தோம். 20 சிபாரிசுகளை செய்திருந்தோம். நாங்கள் நல்லதொரு பணியாற்றியதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ஆனால் இரண்டரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு முடங்கிப்போய்விட்டது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications