வங்கி பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்யுங்க- பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு மோடி திடீர் உத்தரவு
பாஜக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வங்கி பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்ய மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது வங்கி பரிவர்த்தனை விவரங்களை டிசம்பர் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற நிபந்தனைகளை அடுத்தடுத்து மத்திய அரசு விதித்தது.
இதன் மூலமாக கருப்பு பணம் வெளியே வரும் என நம்புகிறது மத்திய அரசு. இருந்தபோதும் பொதுமக்கள் அன்றாட செலவுகளுக்கு பணம் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர்.
இதனிடையே பாஜக நிர்வாகிகள் சிலர் தங்களது வீடுகளில் பதுக்கி வைத்த பணம் பிடிபடுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் பாஜக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது வங்கி பரிவர்த்தனை விவரங்களை கட்சித் தலைவர் அமித்ஷாவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது நவம்பர் 8-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரையிலான வங்கி பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் அமித்ஷாவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.