இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி!!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்து உள்ளார். நாடு விடுதலை அடைந்த பின்னர் இஸ்ரேல் செல்லும் முதலாவது இந்திய தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு முதலீடுகளை கவர்ந்து வருவதில் ஆர்வம் காட்டுகிறார். அதே நேரத்தில் அவரது இந்த வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன.

இந்த நிலையில் அவர் இஸ்ரேலுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இந்திய ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இருந்தவர்கள் யாரும் இதுவரை அரசு முறைப் பயணமாக இஸ்ரேலுக்கு சென்றது கிடையாது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி, பாலஸ்தீனத்திற்கும் பயணம் செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், நான், இந்த ஆண்டு இறுதிக்குள் இஸ்ரேல், ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் செல்லவுள்ளார்.
பிரதமர் பயணத்துக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இஸ்ரேல் நமக்கு நட்பு நாடாக இருக்கும்போதும், பாலஸ்தீனத்துக்கான இந்தியாவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை.
அந்த நாட்டுக்கு நமது ஆதரவு தொடரும். பாலஸ்தீனத்திற்கும் பிரதமர் மோடி பயணம் செய்வார். ஜூலை மாதம் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டிலும் மோடி பங்கேற்கிறார். அப்போது துருக்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளார் என்றார்












Click it and Unblock the Notifications