பொருளாதார பிரச்சனைகள் குறித்து மோடி பேசுவதே இல்லையே.. ஏன்: ப.சிதம்பரம்
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியை விட பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியால் அதிக வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:
நாடு விடுதலை அடைந்தது முதல் ஒவ்வொரு 5 ஆண்டு கால ஆட்சியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகபட்ச வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது;

சர்வதேச பொருளாதாரம் நெருக்கடியில் இருந்த போதும் நமது பொருளாதாரம் 6.6% வளர்ச்சியை கொண்டதாக இருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளில் இந்தியாவின் வர்த்தகம் மற்ற நாடுகளை விட 6.2% வளர்ச்சி அடைந்துள்ளது;
குஜராத் வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் கிடையாது. அதிக முதலீடுகளை கவருவதற்காக அப்படி சொல்லப்படுகிறது. புள்ளிவிபர அடிப்படையில் மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, தமிழகம், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்கள்தான் அதிக முதலீடுகளை கொண்டவை.
நரேந்திர மோடி 10% பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவேன் என்கிறார். அது எப்படி சாத்தியமாகும்? சீனா கூட இன்னும் 10% பொருளாதார வளர்ச்சியை எட்டவில்லையே.. அரை டஜன் நாடுகள்தான் 5% பொருளாதார வளர்ச்சியைத் தாண்டி இருக்கின்றன.
நாட்டின் முக்கிய பொருளாதார பிரச்சனைகள் குறித்து மோடி பேசுவதே இல்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறை, ஜி.எஸ்.டி., டி.டி.சி போன்ற பொருளாதார விஷயங்களை மோடி ஊடகங்களிடம் விவாதிப்பதும் இல்லை. இது போன்ற பொருளாதார விவகாரங்களில் தனது நிலையை மோடி தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications