ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி.. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
டெல்லியில் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
டெல்லி: ரூபாய் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக நிதி அமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி இரவு அறிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றி வருகின்றனர்.
இதனால் உண்டான குழப்பமான சூழல் காரணமாக நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஒரு வாரத்திற்குமேலாகியும் பல இடங்களில் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏடிஎம்களும் சரிவர இயங்கவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இந்த பிரச்சனை குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. நிதி அமைச்சர், அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். வங்கிகளில் நடைபெற்று வரும் பண பரிவர்த்தனை குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரவிக்கின்றன.