மத்திய அரசு விருதுகளில் இந்திரா, ராஜீவ் பெயர் நீக்கம்... காங்கிரஸ் கொந்தளிப்பு
டெல்லி: மத்திய அரசின் ஆட்சி மொழி விருதுகளில் இருந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை அமல்படுத்தற்காக, உள்துறை அமைச்சகத்தில் ‘ராஜ்பாஷா விபாக்' என்ற பிரிவு இயங்கி வருகிறது. இதன் சார்பில் ஆண்டுதோறும், இந்திராகாந்தி பாஷா புரஸ்கார் (இந்திராகாந்தி ஆட்சிமொழி விருது) மற்றும் ராஜீவ்காந்தி ராஜ்பாஷா புரஸ்கார் (ராஜீவ்காந்தி ஆட்சிமொழி விருது) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த விருதுகளின் பெயர்களை ‘ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்' (ஆட்சிமொழி புகழ் விருது) மற்றும் ராஜ்பாஷா கவுரவ் புரஸ்கார் (ஆட்சிமொழி மாண்பு விருது) என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகம், குடியரசு தலைவர் செயலகம் உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் உள்துறை அமைச்சகத்தின் ஆட்சிமொழித்துறை அனுப்பியது. மேலும், இதனை சாதனை அறிக்கை கையேட்டிலும் குறிப்பிடப்பட்டது.
இந்த விருதுகளை வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி அன்று குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.
மேலும் இதுதொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜுஜு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விருதுகளில் முன்னாள் பிரதமர்களின் பெயர்களை நீக்கியது மத்திய அரசு நிர்வாக ரீதியாக எடுத்த நடவடிக்கை என்றும், இதில் அரசியல் தொடர்பு இல்லை' என்றும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், விருதுகளில் பெயர் நீக்கம் செய்யப் பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ‘மோடி அரசு மிகவும் குறுகிய நோக்குடனும், அரசியல் காரணங்களாலும் இதுபோன்ற சிறுமையான காரியங்களில் ஈடுபட்டு வருவதாக'வும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications