நெகட்டிவ் கேரக்டர்.. நாட்டை ஏமாற்றிவிட்டார்.. மோடி மீது சந்திரபாபு நாயுடு கடும் பாய்ச்சல்
விசாகபட்டினம்: பிரதமர் மோடி நெகட்டிவ் கேரக்டர் என்றும், இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் என்றும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
விசாகபட்டினத்தில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் சவுத்', நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மோடி தன்னை வலிமையானவர் என்று கூறுகிறார். ஆனால், நாட்டுக்காக அவர் என்ன செய்தார்? பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டேண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள், வெறும் கோஷமாகவே உள்ளன. நிஜத்தில் செயல்பாட்டுக்கு வரவில்லை.

மோடியைவிட யார் வேண்டுமானாலும் சிறப்பானவராகத்தான் இருப்பார்கள். மோடி ஒரு நெகட்டிவ் கேரக்டர். பொருளாதாரத்தையே நாசம் செய்துவிட்டார். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதியை நினைத்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து, காங்கிரஸ் அரசை குற்றம் சொல்லி வருகிறார்.
மத்திய ஏஜென்சிகளான சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை, மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஜனநாயக அமைப்புகளை மோடி அரசு மதிக்கவில்லை. ஆந்திராவிலுள்ள விசாரணை அமைப்புகள், சிபிஐயைவிட சிறப்பாக செயல்படுகின்றன.
அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் மிரட்டுவதற்கு, விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தலித்துகள், முஸ்லீம்கள் அச்சத்தில் உள்ளனர். மீடியாக்களால் அவற்றை செய்தியாக கூட சொல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மோடி கோஷத்தை முதலில் நானும் நம்பினேன். ஆனால் அவர் நாட்டை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications