2 மணிநேரம் பாடம் நடத்தும் மோடியால் ரூ22,000 கோடி மோசடி குறித்து 2 நிமிடம் பேச முடியாதோ?ராகுல் 'நச்'
மாணவர்களுக்கு 2 மணிநேரம் பாடம் நடத்தும் பிரதமர் மோடியால் ரூ22,000 கோடி வங்கி மோசடி குறித்து 2 நிமிடம் கருத்து தெரிவிக்க முடியாதா? என்பது ராகுலின் கேள்வி.
டெல்லி: மாணவர்களுக்கு 2 மணிநேரம் பாடம் நடத்தும் பிரதமர் மோடியால் ரூ22,000 கோடி வங்கி மோசடி குறித்து 2 நிமிடம் கருத்து தெரிவிக்க முடியாதா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் வைர வியாபாரியின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,400 கோடி மோசடி நாட்டை உலுக்கி வருகிறது. நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இப்பிரச்சனை கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வங்கி மோசடி விவகாரத்துக்கு பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் காரணம் என்றார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, பணமதிப்பிழப்பு நடவடிக்கையே இந்த ஊழலுக்கு காரணம் என சாடியிருந்தார்.
இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, பள்ளிகுழந்தைகளுக்கு பிரதமர் மோடி 2 மணிநேரம் பாடம் நடத்துகிறார். ஆனால் ரூ22,000 கோடி வங்கி ஊழல் குறித்து 2 நிமிடம் பேச மறுக்கிறார். நிதி அமைச்சர் அருண்ஜேட்லியோ பதுங்கியிருக்கிறார் என சாடியுள்ளார்.
பாஜகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்தான் இந்த மோசடிக்கு பொறுப்பு என்கிறது. ஆனால் காங்கிரஸோ, மோடி ஆட்சிக் காலத்தில்தான் அத்தனை மிகப் பெரிய சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது; ஆகையால் மோடி அரசுதான் பதில்தர வேண்டும் என்கிறது.