ரூபாய் நோட்டு சப்ளையை அதிகரிப்பது எப்படி? நள்ளிரவில் ஆலோசனை நடத்திய மோடி
ரூபாய் நோட்டு சப்ளையை துரிதப்படுத்துவது பற்றி, நள்ளிரவு வரை அமைச்சர்களுடன் ஆலோசித்தார் மோடி.
டெல்லி: ரூபாய் நோட்டு வினியோகம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதுகுறித்து அறிந்ததும், வங்கிகளில் பண பரிமாற்றம் எப்படி நடைபெறுகிறது, ஏன் இந்த பிரச்சினை என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் உள்ளோர் இதில் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் நிதி அமைச்சக துறையின் மூத்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
வங்கி தாளாளர்கள் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்கள். வங்கி தாளாளர்கள் ஒரே நாளில் பலமுறை பணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.