இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொள்கின்றனர்.
பிரதமர் மோடி செஷல்ஸ் நாட்டின் தலைநகர் விக்டோரியாவுக்கு இன்று இரவு போய் சேருகிறார். அவரது நிகழ்ச்சிகள் நாளை தொடங்குகின்றன.

பிரதமர் மோடி நாளை பிற்பகலில் மொரீஷியஸ் தீவுக்குச் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக 13-ந் தேதி பிரதமர் மோடி இலங்கைக்கு செல்கிறார். கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
13-ந் தேதி காலையில் கொழும்பு சென்றடையும் பிரதமர் மோடிக்கு அரசு மரியாதை மற்றும் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. பின்னர், இலங்கை அதிபர் சிறிசேனவுடன் இந்திய-இலங்கை உறவு குறித்த முக்கியமான பேச்சுவார்த்தையில் மோடி கலந்து கொள்கிறார்.
பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர் நிர்மல் பால டி சில்வா, முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகியோருடன் பிரதமர் மோடியின் சந்திப்பு நடைபெறுகிறது.
முன்னாள் அதிபர் ராஜபக்சேவை மோடி சந்திப்பாரா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், அதற்கான வாய்ப்பை அதிகாரிகள் மறுக்கவில்லை.
அதைத் தொடர்ந்து தலைமன்னாருக்கு செல்லும் அவர், புதிய ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி போகிறார்.
இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தை தொடங்கிவைக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். அன்று இரவு வடக்கு மாகாணத்தின் ஆளுநரை சந்தித்து உரையாடுகிறார்.












Click it and Unblock the Notifications