மோடி அரசில் எல்லாமே வெளம்பரம்தான்;பொருளாதார மேம்பாட்டுக்கு வழியில்லை: அருண் ஷோரி கடும் தாக்கு!
டெல்லி: மோடி அரசு தலைமையிலான மத்திய அரசு, இலக்கற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டுள்ளதாக பத்திரிகையாளரும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சருமான அருண் ஷோரி சாடியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அருண்ஷோரி அளித்த பேட்டி:

நரேந்திர மோடியின் ஓராண்டு ஆட்சிக் காலம் சில வகையில் சிறப்பானதாக இருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கைகளில் அவரது செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.
ஆனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் என்ற அவரது தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. திட்டங்களை விளம்பரப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியை, அவற்றைச் செயல்படுத்துவதில் காட்டுவதற்கு மத்திய அரசு தவறிவிடுகிறது.
முன்தேதியிட்ட வரிவிதிப்பு முறை, உற்பத்திச் சலுகைகள் ஆகியவற்றின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் சில கொள்கை முடிவுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் ஏழை மக்களை அச்சப்படுத்தும் வகையில் இருக்கின்றன.
மொத்தத்தில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இலக்கற்றவையாக உள்ளன. தற்போதைய மத்திய பாஜக அரசின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினர்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள், ஹிந்து அமைப்புகளின் மதமாற்ற நிகழ்ச்சிகள் ஆகியவை சிறுபான்மை சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதுதவிர சிறுபான்மையினர் தொடர்பான விரும்பத்தகாத கருத்துகளை பா.ஜ.க. எம்பிக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரங்களில் பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருவது மக்களைக் குழப்படையச் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாநில முதல்வரைப் போலவே இன்னமும் செயல்படுகிறார். அருண்ஜேட்லி, அமித்ஷா போன்றோர்தான் முக்கிய ஆலோசனைகளை எடுக்கிறவர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்..
இவ்வாறு அருண் ஷோரி சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications