கூடங்குளம் அணுவுலை, நிலவில் மனிதன்.. மோடி - புடின் சந்திப்பில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்!
பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பில் மிக முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பில் மிக முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் இன்று டெல்லியில் சந்திப்பு நடத்தினார்.
இதில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முக்கியமாக மேலும் எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் கையெழுத்தாகி உள்ளது.
8 முக்கிய ஆவணங்கள் பரிமாற்றம்
இந்த சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தான அதே சமயம் முக்கியமான சில ஆவணங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்டு ரகசியம் போல உள்ள 8 ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இது இரண்டு உறவுகளை இன்னும் பலப்படுத்தும்.
அணு உலை
இதில் எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அடுத்து இன்னொரு முக்கியமான ஒப்பந்தம் என்றால் அது அணு உலை ஒப்பந்தம்தான். தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் இன்னும் இரண்டு அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் அடுத்த 20 வருடத்தில் இந்தியாவில் 12 அணு உலைகளை ரஷ்யா அமைக்க உள்ளது.
ஸ்பேஸ் மிஷன்
இது இல்லாமல் விண்வெளி ஆராய்ச்சியிலும் ரஷ்யா உதவ உள்ளது. இந்தியாவின் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு உதவி செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றையும் அமைக்க இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.
வேறு என்ன
அது மட்டுமில்லாமல், விவசாய துறையில் ஒரு ஒப்பந்தமும், மருத்துவ துறையில் 2 ஒப்பந்தமும், வணிகம் தொடர்பாக 3 ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. மேலும் ரயில்வே தொடர்பாக 2 ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.