தேர்தல் வெற்றியை தொடர்ந்து.. காவி தொப்பியுடன் குஜராத் வீதிகளில் மோடி பேரணி.. ஆரவாரம்!
அகமதாபாத்: தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளி வாகனத்தில் பேரணி சென்றார்.
Recommended Video
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சூறாவளிப் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். இந்தியாவில் அடுத்து தேர்தலை சந்திக்கவிருக்கும் மாநிலங்களில் ஒன்றான குஜராத் சென்ற நரேந்திர மோடிக்கு மாநில பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து காந்திநகரில் அமைந்து உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலத்துக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் அவர் பயணம் செய்தார். காவி தொப்பி, வெள்ளை குர்தா அணிந்துகொண்டு சாலையோரங்களில் திரண்டிருந்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கையசைத்தபடி அவர் 10 கி.மீ. தூரம் பயணித்தார்.
அவருடன் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சி.ஆர்.பாடில் ஆகியோர் வலது மற்றும் இடது புறங்களில் நின்றபடி சென்றனர். பாஜக தலைமையகத்தில் ஓய்வெடுத்த பின்னர், 3 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ள குஜராத் பஞ்சாயத்து ராஜின் மகா சம்மேளன கூட்டத்தில் இன்று மாலை அவர் உரையாற்றினார். அத்துடன் பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
நாளை காலை ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டிடத்தை அர்ப்பணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்த உள்ளார். நாளை மாலை குஜராத் மாநில விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் கெல் மகாகும்ப் என்ற விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கும் உரையாற்ற உள்ளார்.
பாரதிய ஜனதாவின் கோட்டை எனக் கருதப்படும் குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 4 மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற்ற கையோடு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்துக்கு சென்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
பாஜக VS சமாஜ்வாதி: உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள்.. இந்த தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?