பிரதமரின் கழிவறைத் திட்டம்.. ரூ. 200 கோடி நிதி தருவதாக டிசிஎஸ், பார்தி அறிவிப்பு!
டெல்லி: பிரதமர் மோடி சுதந்திர தின விழாவின்போது பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகளைக் கட்ட நிதியுதவி தாருங்கள் என்று விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.
நாங்கள் ரூ. 200 கோடி தருகிறோம் என்று டாடா கன்சல்டன்சி நிறுவனமும், பார்தி அறக்கட்டளையும் அறிவித்துள்ளன.
பிரதமரின் தனது சுதந்திர தின உரையின் போது விடுத்த அழைப்பை ஏற்று அன்றைய தினமே ஓரியண்டல் காமரஸ் வங்கி, கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு தனித்தனியாக 200 கழிவறைகள் கட்ட 2 கோடி ரூபாயை வழங்கியது.

10,000 பள்ளிகளுக்கு டிசிஎஸ் உதவி
இந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனம், நாடு முழுவதும் 10 ஆயிரம் பள்ளிக் கூடங்களில் கழிப்பறைகளைக் கட்ட ரூ. 100 கோடி தருவதாக அறிவித்துள்ளது.

பெண் மாணவிகளின் சுகாதாரம்
அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பெண் மாணவிகளுக்கான சுகாதாரமான கழிவறை வசதி செய்து தருவதன் மூலம் கல்வியில் அவர்கள் முன்னேற வாய்ப்புள்ளதை கருதி இந்த நிதியுதவியை வழங்குவதாக டாடா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பார்தி டெலிகாம்... ரூ. 100 கோடி
அதே போல் பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பார்தி அறக்கட்டளை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக இத்திட்டத்திற்காக தத்தெடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது. அங்குள்ள பள்ளிகளில் கழிவறை கட்டுவதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நான்கு நாட்களுக்குள்
மோடி அழைப்பு விடுத்த நான்கு நாட்களுக்குள் ரூ. 200 கோடி அளவுக்கு நிதி குவி்ந்திருப்பது மத்திய அரசை குஷிப்படுத்தியுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில்
பார்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும். அதன் பின்னர் லூதியானா மாவட்டப் பள்ளிகள் அனைத்தும் கழிப்பறைகளுடன் கூடிய முதல் மாவட்டமாக நாட்டில் உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications