விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் மெட்ரோ ரயிலில் ஆஸி பிரதமருடன் சுற்றி செல்பி எடுக்கும் மோடி!
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புலுடன் இந்திய பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
டெல்லி: பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று நடத்திய நிர்வாணப் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதுகுறித்து வாயே திறக்காத பிரதமர் மோடி இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமருடன் மெட்ரோ ரயிலில் செல்வது, செல்பி எடுப்பது, கோயிலில் சாமி கும்பிடுவது என நேரத்தை செலவழித்து வருகிறார்.
டெல்லியில் கடந்த 14ஆம் தேதி முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு நூதனப் போராட்டங்களை அறவழியில் நடத்தி வரும் விவசாயிகள் இன்று திடீரென நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்று மனுவை மட்டும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு திருப்பியனுப்பியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆடைகளை கலைந்து கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தினர்.

கொளுத்தும் வெயிலில் உருண்டு..
வெறும் காலுடன் நடக்க முடியாத டெல்லி சாலையில் வெற்றுடம்புடன் சக விவசாயிகளுக்காக அவர்கள் உருண்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியுள்ளது.

ஆஸி. பிரதமருடன் சுற்றும்..
இந்நிலையில் இதுவரை விவசாயிகளை சந்திக்காத பிரதமர் மோடி, தமிழக விவசாயிகள் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை. இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி நேரத்தை செலவழித்து வருகிறார்.

மெட்ரோ ரயிலில் செல்பி
4 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமரும் இந்திய பிரதமர் மோடியும் இன்று டெல்லி மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணம் செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக மெட்ரோ ரயிலில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

கோயில் பிரார்த்தனை - கொந்தளிப்பு
பின்னர் டெல்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பிராத்தனை செய்தனர். விவசாயிகள் போராட்டத்தால் நாடே அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்னும் மவுனியாகவே எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications