மோடியும் அதிகாரிகளும் தகுந்த விசாவுடனே பாகிஸ்தானுக்கு வந்தனர்: வெளியுறவு ஆலோசகர் அஜிஸ் விளக்கம்
டெல்லி: பிரதமர் மோடியும் அதிகாரிகளும் தகுந்த விசாவுடனே பாகிஸ்தானுக்கு வந்தனர் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் நவாஷ் ஷெரீப்பை சந்தித்தார் இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த திடீர் சந்திப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வரை பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த போதிலும், மோடியின் இந்த சந்திப்பிற்கு எதிராக சில பாகிஸ்தான் ஊடகங்கள் அவதூறு பரப்பி வருகின்றன.
சில தினங்களுக்கு முன்னர், C-42 என்ற பாகிஸ்தான் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர், "பாகிஸ்தானின் வரலாற்றிலேயே முதல் முறையாக 120 பேர் நம் நாட்டில் விசா இல்லாமல் தரையிறங்கியுள்ளனர்" என்று கொந்தளிக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் உலா வந்தது.
இந்த திடீர் பயணத்தின் போது மோடியுடன் முக்கிய அதிகாரிகள் உட்பட 120 பேர் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே ஓய்வெடுக்க, பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ஆகியோருடன் மட்டுமே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இல்லத்திற்கு சென்றார்.