"மோடி எடுப்பார் கைப்பிள்ளை கிடையாது"- பொன்.ராதாகிருஷ்ணன் பளிச்
டெல்லி: காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்று மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அதன்பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து நான் சுஷ்மாசுவராஜுக்கு விளக்கம் அளித்தேன். அவரும் இதில் கவலை கொண்டிருப்பதாக கூறினார். இதற்கு நிரந்தர தீர்வு திட்டம் ஒன்றை வைத்துள்ளதாகவும், விரைவில் அதை அமல்படுத்த உள்ளதாகவும் சுஷ்மா கூறினார்.

ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடாவை சந்தித்து தமிழகத்து ரயில் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளேன். சென்னை-கன்னியாகுமரி இடையே இரட்டை பாதை அமைப்பது, மதுரை- கன்னியாகுமரி வழிப்பாதை துவங்கப்படாதது போன்ற விஷயங்களை கூறினேன். ராயபுரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக அறிவிப்பது குறித்தும் வேண்டுகோள்விடுத்தேன். காவிரி பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி அதிகம் பேச முடியாது.
கர்நாடகத்தின் அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் தேர்தலில் சந்தித்த தோல்வியினால் ஏதாவது செய்து அங்குள்ள மக்களின் கவனத்தை கவர நினைக்கிறார்கள், நமக்கு அந்த பிரச்சினை கிடையாது. பிரதமர் கண்டிப்பாக தமிழகத்துக்கு நீதி வழங்குவார். அவர் மற்ற பிரதமர்களை போல எடுப்பார் கைப்பிள்ளை கிடையாது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications