ரூ.1000 கோடி மோசடி வழக்கு: நடிகை லீனா, காதலன் சுகாஷ் மீண்டும் தலைமறைவு
பெங்களூர்: ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையான நடிகை லீனா மரியாபால், அவரது காதலர் சுகாஷ் ஆகியோர் மீண்டும் தலைமறைவாகிவிட்டனர்.
பெங்களூரை சேர்ந்த வாலிபர் சுகாஷ் சந்திரசேகர், கர்நாடக அரசுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது. இது தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து ஏராளமான தொழில் அதிபர்களை சுகாஷ் தனது மோசடி வலையில் விழ வைத்தார். இவரது காதலியும், நடிகையுமான லீனாவும் உடந்தையாக இருந்தார்.
கர்நாடக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை மொத்தமாக சப்ளை செய்வதற்கு ஆட்கள் தேவை என்று கூறி பெரிய தொழில் நிறுவனங்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பல கோடிகளை சுகாஷ் சுருட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக தொழில் அதிபர்கள் பலரிடம் கர்நாடக மாநிலத்தின் அரசு அதிகாரி போல சுகாஷ் பேசியிருக்கிறார். அப்போது, காதலி லீனா, தன்னை அவரது தனிச் செயலாளர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதற்கான போலி ஆவணங்களை இ-மெயில் மூலமாகவே சுகாசும், லீனாவும் அனுப்பி வைத்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பி ஏராளமான தொழில் அதிபர்கள் சுகாசின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பிரபல பேரீச்சம் பழ நிறுவன அதிபரிடமும் சுகாஷ் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இது போன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவர் மோசடி வித்தைகளை அரங்கேற்றியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த லீனாவையும், சுகாசையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சுகாஷ் தப்பி விடவே லீனா மட்டும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் பிரபல நடிகையாகும் ஆசையில் நானும், சுகாசிடம் ஏமாந்து விட்டேன் என்று கூறினார். இதன் பிறகு கடந்த ஜூலையில் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த சுகாசை டெல்லி போலீசார் பிடித்தனர். இதன் பிறகு சென்னை போலீசார் சுகாசை காவலில் எடுத்து விசாரித்தனர்.
இங்குள்ள மோசடி வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்கள். நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வந்த சுகாஷ், லீனா இருவரும் தற்போது தலை மறைவாகி விட்டனர். 2 பேரும் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications