கோமியத்துக்கு காசு... பாஜக வழியில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசின் பலே திட்டம்
ராய்பூர்: பணம் கொடுத்து மாட்டுச் சாணம் வாங்கும் திட்டத்தை தொடர்ந்து பசு கோமியத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன.
தற்போது காங்கிரஸ் ஆளும் இரண்டு மாநிலங்களில் ஒரு மாநிலமான சத்தீஸ்கரிலும் பாஜக ஆளும் மாநிலங்களின் வழியில் பசுக்களுக்காக தனி திட்டங்களை அரசு தொடங்கி வருகிறது.

மாட்டுச்சாண பெட்டியுடன் பட்ஜெட்
அண்மையில் சத்தீஸ்கரில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவைக்குள் கொண்டு செல்லப்பட்ட பெட்டி மாட்டு சாணத்தில் செய்ததாக முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தெரிவித்தார். கால்நடை வளர்ப்புக்கான பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அம்மாநில அரசு அறிவித்தது.

ஒரு கிலோ மாட்டுச் சாணம் ரூ.1.50
கடந்த 2020 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் அரசு விவசாயிகளிடம் மாட்டுச் சாணத்தை பெற்று பணம் கொடுக்கும் கோதன் நியாய் யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி ஒரு கிலோ மாட்டுச் சாணத்தை ரூ.1.50க்கு சத்தீஸ்கர் அரசு வாங்குகிறது. லைவ்ஸ்டாக் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி சத்தீஸ்கரில் மட்டும் 2.61 லட்சம் கால்நடைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோமியம் பிடித்துக் கொடுத்தால் காசு
அந்த வழியில் தற்போது பசு கோமியத்துக்கு பணம் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது. இது தொடர்பாக நேற்று தொழில்நுட்பக்குழு அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், இந்த தொழில்நுட்பக்குழு இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து செயல்படுத்த உதவும் என்றார்.

ஏன் இந்த திட்டம்?
இந்திரா காந்தி வேளாண் கல்லூரி மற்றும் காமதேணு பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்த குழு 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்க சத்தீஸ்கர் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இந்த குழு பசு கோமியத்தை சேகரிப்பது எப்படி? அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன? என்பதையும் கோமியத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யும். இந்த குழு பசு கோமியத்தின் மூலம் இயற்கை உரங்கள், இயற்கை நொதிகள் தயாரிக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

திட்டம் எப்படி செயல்படும்?
ஏற்கனவே கால்நடை விவசாயிகளிடம் மாட்டுச் சானத்தை சேகரிக்கும் அதே வழிமுறையை கொண்டே கோமியத்தையும் சேகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் கால்நடை கூடங்களில் கோமியங்கள் சேகரிக்கப்படும் என்றும், அதற்கான தொகை கால்நடை வளர்ப்பவர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் ஆலோசகர் பிரதீப் ஷர்மா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications