சட்டவிரோத பணப் பரிமாற்றம்: மகா.முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவினரால் அதிரடி கைது
மும்பை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸின் அனில் தேஷ்முக்.
மும்பை ஹோட்டல்கள், மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து மாதம் ரூ100 கோடி லஞ்சம் பெற்றுத் தர தேஷ்முக் நெருக்கடி கொடுத்ததாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால் உள்துறை அமைச்சர் பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார்.

அமலாக்கப் பிரிவு ரெய்டு
அண்மையில் அனில்தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான ரூ4.20 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் மும்பை மதுபான விடுதி உரிமையாளர்களிடம் சட்டவிரோதமாக ரூ4.70 கோடி அனில் தேஷ்முக் வசூலித்தார் எனவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அமலாக்கத்துறை சம்மன்
இந்த தொகையை போலி நிறுவனங்கள் பெயரில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தார் அனில்தேஷ்முக் என குற்றம்சாட்டி அவர் மீது வழக்கும் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு. இது தொடர்பாக அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யபட்டனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகவும் அனில்தேஷ்முக்குக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

விசாரணைக்கு திடீர் ஆஜர்
ஆனா அனில்தேஷ்முக் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தார். தமக்கான அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் அனில்தேஷ்முக் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு திடீரென ஆஜரானார் அனில்தேஷ்முக்.

அனில்தேஷ்முக் அதிரடி கைது
அனில்தேஷ்முக்கிடம் சுமார் 12 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் நள்ளிரவில் அனில் தேஷ்முக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அனில்தேஷ்முக் கைது சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று நீதிமன்றத்தில் அனில்தேஷ்முக் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications