"லேட்" ஆனாலும் "ஃபாஸ்ட்"டா பெய்யுதாமே தென் மேற்குப் பருவ மழை
டெல்லி: எல் நினோ பாதிப்பால் பருவமழை குறைய வாய்ப்பு உள்ளது என்று அஞ்சப்பட்ட நிலையில் நடப்பாண்டு சராசரியைவிட அதிகமான பருவமழை பெய்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மழையால் அதிகம் பயனடையும் வடமேற்கு இந்திய மாநிலங்களில் மழை அதிகமாக பெய்துள்ளது. ஆனால் தென் தீபகற்பம், மத்திய இந்தியா பகுதிகளில் மழையளவு சிறிது குறைந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு 12 சதவிகிதம் குறைவாகப் பெய்யும் என்று கணிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கடந்த 2 வாரத்தில் வழக்கத்தை விட 5 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை
ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 5ம்தேதிதான் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியது. ஆனாலும் மழை தீவிரமடையவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்து அனைவரையும் அச்சுறுத்தியது. மழை அதிகமாக பெய்ய வருணபகவானை வேண்டிக்கொள்ளுங்கள் என்று மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தனும் கூறியிருந்தார்.

சராசரிக்கும் அதிகம்
அதேநேரத்தில் விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்த ஆண்டு இதுவரை வழக்கத்தைவிட அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழையின் தீவிரம்
குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பருவமழை சீசன் சாதகமாக உள்ளது. மேலும் கர்நாடகாவின் கடற்கரை பகுதிகள், கொங்கன் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் பருவமழை, அடுத்த 3 நாள்களில் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கும் என டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடுமுழுவதும் மழை அளவு
கடந்த 1ஆம் தேதி முதல் 15ம்தேதி வரை, நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 69.6 சதவிகிதம் பருவமழை பெய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் வழக்கமாக 61.4 சதவிகித மழை மட்டுமே பெய்யும். இந்த ஆண்டு இது அதிகமாகும். இதில், அதிகபட்சமாக நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் 20 சதவிகிதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

கோவா கொங்கண் பகுதிகளில்
அதேசமயம், நாட்டின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வழக்கத்தைவிட முறையே 6 சதவீதம், 10 சதவீதம் என்ற அளவுக்கு மழை குறைவாக பெய்துள்ளது. இதேபோன்று கோவா, கொங்கண் பகுதிகளிலும் வழக்கத்தைவிட 20 முதல் 59 சதவிகித அளவிற்கு குறைவாக மழை பதிவாகியுள்ளது.

மழை தீவிரவமடையும்
மகாராஷ்டிரம், விதர்பா, மத்தியப் பிரதேசம், ஒடிஷாவின் சில பகுதிகளில் தற்போது பெய்துவரும் பருவமழை, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களின் பெரும்பாலான இடங்களிலும் அடுத்த 3 நாள்களில் தொடங்கும் என புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆரம்பமே அதிரடி
போபால், இந்தூர், குவாலியர், ஜபல்பூர் உள்பட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ராஜ்கர் மாவட்டத்தின் நரசிங்கர் பகுதியில் 8 செ.மீ. மழை பதிவானதாக ஓடிஷா மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வடமேற்குப் பகுதிகளில்
இதேபோன்று, அரபிக்கடலின் வடக்கே அமைந்துள்ள பகுதிகள், வங்கக் கடலின் வடமேற்குப் பகுதிகள், கடலோர ஆந்திரம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலும் சில நாள்களில் பருவமழை தொடங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடங்கும் பருவமழை 60 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரபிக்கடலோரப்பகுதிகளிலும் கேரளா மாநிலத்திலும் பருவமழையின் தொடக்கம் சராசரிக்கும் குறைவான அளவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications