ஓடிபோன மருமகள்.. ஷாக் ஆன மாமியார்.. ஷார்ப் பிளேடை எடுத்து ஒரே "கட்".. மிரண்டு போன ராஞ்சி
மருமகளுக்காக தன் நாக்கையே வெட்டி கொண்டார் மாமியார்
ராஞ்சி: வீட்டை விட்டு ஓடிப்போன மருமகளுக்காக மாமியார் செய்த காரியத்தை நினைத்து ராஞ்சி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
நம் நாட்டில் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள் நாம்.. எந்த உறவாக இருந்தாலும் அதற்கான மரியாதை, பாசமும் காலங்காலமாக நம்முடனேயே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

அதில் சற்றே விரிசல் தரும் உறவும் உள்ளது.. அதுதான் மாமியார் - மருமகள் உறவு... இவர்கள் ஒற்றுமையாக இருந்தாலே அந்த குடும்பம் ஆஹா ஓஹோவென்று வளர்ந்துவிடும்... ஊரே திருஷ்டி பட்டு விடும்... இதற்கு காரணம் இவர்களுக்குள் இருக்கும் சிக்கல்களும், உரிமை போராட்டமும்தான்.
இது காலத்துக்கும் நடந்து வரும் சகஜமான நிகழ்வு ஆகும்... மாமியாரை அம்மாவாகவும், மருமகளை மகளாகவும் நினைப்போர் வெகு சிலரே!
அந்த வகையில், ஒரு வித்தியாசமான சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.. செராகேலா-கர்சவன் மாவட்டத்தில் என்ஐடி என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் லட்சுமி நிர்லா... இவரது மருமகள் ஜோதி. எப்ப பார்த்தாலும் இவர்களுக்குள் சண்டை இருந்து கொண்டே இருக்குமாம்.. இந்நிலையில், கடந்த 14ந்தேதி ஜோதி தன் குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு போய்விட்டார்.
இதனால் பதறி போனது ஜோதியின் கணவர் இல்லை.. சாட்சாத் மாமியார்தான்.. எங்கெங்கோ தேட ஆரம்பித்தார்.. மருமகள் கிடைக்கவில்லை.. அதனால், மகனிடம் போலீசில் புகார் தருமாறு சொல்லவும், அவரும் அதன்படியே புகார் தந்தார்... போலீசாரும் ஜோதியை தேடி கொண்டிருக்கிறர்கள்.
இதனிடையே மாமியார், தனக்கு தெரிந்த ஒரு ஜோசியக்காரரை போய் சந்தித்து மருமகள் பற்றி கேட்டுள்ளார்.. அதற்கு அவரும், நாக்கை வெட்டி கடவுளுக்கு காணிக்கை செலுத்தினால் மருமகள் திரும்பி வருவார் என்று சொல்லி உள்ளார்.. அதன்படியே மாமியார் லட்சுமி, மருமகள் கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டினார். அங்குள்ள ஒரு சிவபெருமான் கோயிலுக்கு சென்றார்.. கையோடு பிளேடு கொண்டு போயிருந்தார்.
கண்ணை மூடி வேண்டிக் கொண்டு, பிறகு திடீரென தன்னுடைய நாக்கையும் அறுத்து காணிக்கையாக உண்டியலில் போட்டார்.. இதை பார்த்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடினர். ஆனால் இதில் அதைவிட அதிர்ச்சி என்னவென்றால், நாக்கை வெட்டியபிறகு ரத்தம் கொட்டி உள்ளது.. அப்போது ஆஸ்பத்திரிக்கு அழைத்தபோது லட்சுமி வரமுடியாது, அது தெய்வ குத்தம் என்று சொன்னாராம்.
அதன்பிறகே அவரை சமாதானப்படுத்தி ஜாம்ஷெட்பூரின் எம்ஜிஎம்எம்சிஎச் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அங்கே சிகிச்சை நடந்து வருகிறது.. இப்போதைக்கு லட்சுமியால் வாயை திறந்து பேச முடியவில்லையாம். இதுகுறித்து லட்சுமியின் கணவர் சொல்லும்போது, "யாரோ நாக்கை வெட்டி சாமிக்கு தந்தால் ஜோதி திரும்பி வந்துவிடுவார் என்று யாரோ சொன்னாங்களாம்.. அதுக்காகத்தான் இப்படி செய்தார்" என்று கூறினார்.
மருமகள் மீது இவ்ளோ பாசம் வைத்திருப்பவர் ஏன் சண்டை போடணும் என்று கேட்பதா? இப்படி ஒரு மூடத்தனத்தை நினைத்து தலையில் அடித்து கொள்வதா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications