திருவனந்தபுரம் அருகே கார் ஆற்றில் பாய்ந்து விபத்து: தாய், 2 வயது குழந்தை பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் கார் ஆற்றில் பாய்ந்ததில் 23 வயது தாய் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் பலியாகினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே இருக்கும் கிளிமானூரைச் சேர்ந்தவர் சபீர். அபுதாபியில் பணிபுரியும் அவரது மனைவி ஜெஸ்னா(23). அவர்களுக்கு 2 வயதில் அலி என்ற மகன் இருந்தான்.
ஜெஸ்னாவின் தம்பி மற்றும் அவரது குடும்பத்தார் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து அபுதாபி கிளம்பினர். அவர்களை வழியனுப்ப ஜெஸ்னா, குழந்தை அலி, ஜெஸ்னாவின் தாய் வகிதா(52), சித்தி சாகிதா(42) ஆகியோர் காரில் விமான நிலையம் சென்றனர். மேலும் ஒரு காரில் உறவினர்கள் சிலர் சென்றனர். அவர்கள் அனைவரும் ஜெஸ்னாவின் தம்பி மற்றும் அவரது குடும்பத்தாரை வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பினர்.
அப்போது உறவினர்கள் வந்த கார் பெட்ரோல் போட பங்கிற்கு சென்றது. ஜெஸ்னா வந்த கார் மட்டும் கிளிமானூர் நோக்கி சென்றது. அப்போது கார் கிளிமானூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வாகனம் டிரைவர் ஜாபர்கானின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கார் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் பாய்ந்த காரை கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். அப்போது காரில் இருந்த ஜெஸ்னாவும், அவரது குழந்தையும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உயிருக்கு போராடிய மீதமுள்ள 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications