உ.பி.யில் சமையல் செய்கையில் வீடு தீப்பிடித்து தாய், 3 குழந்தைகள் உடல் கருகி பலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமையல் செய்யும்போது வீடு தீ்ப்பிடித்து எரிந்ததில் பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஷாகசிபுரா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. அவரது குழந்தைகள் ஆருஷி, ஆகாஷ் மற்றும் தீபக். லட்சுமி தனது கணவர், குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று அவர் சமையல் செய்து கொண்டிருக்கையில் வீடு தீப்பிடித்தது. அந்த நேரம் காற்று பலமாக வீசியதால் வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் சிக்கிய லட்சுமியும் அவரது குழந்தைகளும் உதவி கோரி கதறினர்.
அவர்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைப்பதற்குள் லட்சுமியும் அவரது குழந்தைகளும் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு தாயும், 3 குழந்தைகளும் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.