'கங்கிராட்ஸ் 'அம்மா': ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட ம.பி. கலெக்டருக்கு நோட்டீஸ்
போபால்: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட நர்சிங்பூர் மாவட்ட கலெக்டருக்கு மத்திய பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்சிங்பூர் மாட்டத்தின் கலெக்டராக இருப்பவர் சிபி சக்ரவர்த்தி. அவர் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தும் விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துக்கள் அம்மா என்று தெரிவித்திருந்தார்.
சில மணிநேரங்களில் அந்த போஸ்ட்டை அவர் நீக்கிவிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது குறித்து விளக்கம் கேட்டு மத்திய பிரதேச அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை புகழ்ந்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பர்வானி கலெக்டர் அஜய் சிங் கங்வார் பணிமாற்றம் செய்யப்பட்டார். போபாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் துணை செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
மேலும் நேரு பற்றி போஸ்ட் போட்டது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.