"இந்தியா கூட்டணி" போபால் கூட்டம் ரத்து- திமுக 'உதயநிதி'காரணம்: கோர்த்துவிடும் பாஜக 'சவுகான்'
போபால்: "இந்தியா" கூட்டணியின் போபால் பொதுக் கூட்டத்துக்கு காரணம் சனாதனத்தை ஒழிப்போம் என்ற பேச்சுதான் என மூத்த பாஜக தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.
டெல்லியில் அண்மையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் "இந்தியா" கூட்டணியின் முதலாவது பொதுக் கூட்டம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போபாலில் செய்தியாளர்களை சந்தித்த ம.பி. முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், போபால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸின் கமல்நாத், ரந்தீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இந்தியாவில் சனாதன தர்மம் என்பது எப்போதும் நிலைத்து நிற்கும்; இந்தியாவில் மக்களே இல்லாமல் போனாலும் சனாதனம் உயிர்ப்புடன் நிற்கும் என்றனர்.
இதனிடையே ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியிருப்பதாவது: மத்திய பிரதேச மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். சனாதன தர்மத்தை அவமதித்துவிட்டனர். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டுப் பேசியதை மத்திய பிரதேச மக்கள் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதனை இந்தியா கூட்டணி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பிரதேச மக்களின் கோபத்தைக் கண்டு 'இந்தியா' கூட்டணி பயந்துவிட்டது. அதனால்தான் போபால் பொதுக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டனர். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
ம.பி.யில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவின் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: இந்தியா கூட்டணி உருவான பின்னர் சனாதன தர்ம எதிர்ப்பு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு நான் சொல்வது,, திமுகவுடனான கூட்டணி உறவை முறித்துக் கொள்ளுங்கள். அதைவிட்டுவிட்டு, திமுகவின் கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசாதீர்கள். இந்தியா என பெயர் வைத்துவிட்டதாலே இந்தியாவில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர். மகாத்மா என பெயர் வைத்துவிட்டால் மகாத்மா காந்தியாக முடியுமா?. இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.












Click it and Unblock the Notifications