ம.பி. முதல்வர் கார் செல்லும் வரை காத்திருந்ததில் சாலை விபத்தில் சிக்கிய மாணவர் பரிதாப பலி
போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் வாகனம் செல்லும் வரை காத்திருந்ததில் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் பலியானார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த கோகுல் பிரசாத் சோனியா என்பவரின் மகன் விகாஸ் பிரசாத் சோனியா(22). கல்லூரி மாணவர். அவர் செவ்வாய்க்கிழமை காலை விதான் சவுதா அருகே செல்கையில் பேருந்து அவர் மீது மோதியது.

இதில் விகாஸுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் கார் கடந்து செல்லும் நேரமாக இருந்ததால் போலீசார் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த விகாஸை தூக்கி சாலையோரம் படுக்க வைத்துவிட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்.
விகாஸ் 45 நிமிடங்கள் கவனிப்பார் இன்றி சாலையோரம் வலியில் துடித்துள்ளார். முதல்வரின் வாகனம் சென்ற பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விகாஸை 20 நிமிடங்கள் வரை ஒரு மருத்துவர் கூட கண்டுகொள்ளவில்லை.
அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் விகாஸ் இறந்துவிட்டார். நான் மக்களின் சேவகன், விவசாயி மகன் என்று கூறிக் கொள்பவர் சிவராஜ் சிங் சவுகான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications