அரசியலில் குதிக்கும் தோனி? சீக்கிரமே தேர்தலில் போட்டி? பிசிசிஐ டாப் அதிகாரி பகிர்ந்த மேஜர் தகவல்
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த தோனி அரசியலுக்கு வரவுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இதுபோன்ற தகவல்களுக்கு தோனி ஒருபோதும் பதிலளித்ததே இல்லை. இதற்கிடையே தோனி அரசியல் தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்கவே முடியாத முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தவர் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2019ம் ஆண்டே ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் இப்போதும் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக தோனி இருக்கிறார்.

இதற்கிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜீவ் சுக்லா, தோனி ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம் தோனியின் அரசியல் குறித்த முடிவை முழுக்க முழுக்க அவரே தான் எடுக்க வேண்டும் என்றும் அவருக்கு யாராலும் அழுத்தம் தர முடியாது என்றும் சுக்லா கூறினார்.
அரசியலில் தோனி:
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தோனியால் ஒரு நல்ல அரசியல்வாதியாக முடியும் என்று நான் நினைக்கிறேன். அதேநேரம் அவர் அரசியலுக்கு வருவாரா.. இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.. கங்குலி கூட மேற்கு வங்க அரசியலில் நுழைவார் என்றே நினைக்கிறேன். தோனி அரசியலுக்கு வந்தாலும் அவர் மிகச் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார். செல்வாக்குடன் இருக்கும் அவரால் எளிதாக வெல்ல முடியும்.
அவர் அரசியலுக்கு வருவாரா என்பது எனக்குத் தெரியாது. அது தொடர்பாக அவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருமுறை அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அப்போது நான் நேரடியாக அவரை தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார்களா எனக் கேட்டேன். அவர் இல்லவே இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
கஷ்டம் தான்:
தோனி தனக்கென செல்போனை கூட வைத்திருப்பதில்லை. அவர் பொதுவெளியில் இருந்து ஒதுங்கி அமைதியான வாழ்க்கையை வாழவே விரும்புகிறார். ஒரு சமயம் சில காரணங்களுக்காக பிசிசிஐ கூட அவரை அணுக முயன்றது. ஆனால், அவரிடம் செல்போன் இல்லாததால் அது கூட கடினமாக இருந்தது. புகழிலிருந்து விலகிச் செல்வது அவரது இயல்பு. அவரது இயல்பு எதுவாக இருந்தாலும், அவர் ஒரு துறவி அல்ல. அவர் தனக்குப் பிடித்த சில விஷயங்களில் தீவிரமாக இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தே இல்லை" என்றார்.
தல தோனி:
ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை ஆறு வீரர்கள் வரை தக்கவைக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தோனியை சிஎஸ்கே அணி நிர்வாகம் தக்கவைத்தது. அதேநேரம் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர் அன்கேப்ட் பிளேயராகவே தக்கவைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தோனி பங்கேற்கும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அதையும் கூட யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் எனப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், தல தோனி தொடர்ச்சியாக விளையாடியே வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications