சசி பதவியேற்பு- தமிழக ஆளுநர் ஆலோசனை எதுவும் கேட்கவில்லை- அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி
சசிகலா பதவியேற்பது தொடர்பாக தமிழக ஆளுநர் தம்மிடம் ஆலோசனை கேட்கவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
டெல்லி: சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக தம்மிடம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் ஆலோசனை நடத்தவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இத்தகவல் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசகர் ஊட்டியில் இருந்தார். அவர் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வித்யாசகர் ராவ் டெல்லிக்கு சென்றுவிட்டார்.
டெல்லியில் அதிகாரப்பூர்வ நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து பேசினார். அத்துடன் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியையும் வித்யாசகர் ராவ் சந்தித்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்வது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது தம்மிடம் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.