மாயாவுடன் கூட்டுச் சேர முலாயம் தயார்.. லாலுவை பேசச் சொல்கிறார்!
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் நான் கூட்டணி சேர வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளார். அந்தப் பணியை அவரே செய்யட்டும். அவர் அதில் இறங்கினால் நான் கூட்டு சேரத் தயார் என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக அபார வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது அகில இந்திய அளவில் ல அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டு வருகிறது.
இதுகாலம் வரை எலியும பூனையுமாக இருந்து வந்த லாலு பிரசாத் யாதவும், நிதீஷ் குமாரும் கை கோர்த்து அனைவரையும் அசரடித்துள்ளனர். அதேபோல உ.பியில் எதிரும் புதிருமாக உள்ள முலாயம் சிங்யாதவும், மாயாவதியும் இணைய வேண்டு்ம் என்று லாலு விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார் முலாயம் சிங் யாதவ். அந்த முயற்சியை லாலுவே எடுக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிதறிப் போன மதச்சார்பற்ற சக்திகள்
லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின்னர் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு மக்கள் மரண அடியைக் கொடுத்து விட்டனர். குறிப்பாக பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பல கட்சிகள் கிட்டத்தட்ட காணாமல் போயுள்ளன.

கடும் அதிர்ச்சியில் நிதீஷ் குமார்
அதில் முக்கியமானவர் பீகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார். பீகாரே இவருக்குப் பின்னால் இருந்த நிலை மாறி இன்று அப்படியே பாஜக பக்கம் போய் விட்டது. இதை ஜீரணிக்கவே முடியவில்லை நிதீஷால். இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலம் முழுவதும் கட்சியை வளர்க்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார்.

லாலுவுடன் கை கோர்ப்பு
மேலும் அதி முக்கிய நிகழ்வாக தனது பரம வைரியாக பார்க்கப்பட்ட லாலு பிரசாத்துடன் அவர் அதிரடியாக இணைந்துள்ளார். இது பீகாரில் மட்டுமல்லாமல் வட இந்திய அரசியலிலும் கூட முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸுடன் இணைந்து போட்டி
இந்த இருவரும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து பீகார் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

முலாயம் - மாயா இணைய விருப்பம்
இந்த நிலையில், பீகாரைப் போல உ.பியிலும் மாயாவதியுடன் முலாயம் சிங் கை கோர்க்க வேண்டும் என்று லாலு விருப்பம் தெரிவித்துள்ளார்.

முலாயம் சம்மதம்
லாலு விருப்பம் குறித்து இன்று முலாயம் சிங் யாதவ் பதிலளிக்கையில், லாலு பேச்சுவார்த்தை நடத்தினால் மாயாவதியுடன் தங்கள் கட்சி கூட்டு சேரத் தயார் என தெரிவித்துள்ளார்.

20 வருட பகை கரையுமா...
கடந்த 20 வருடங்களாக மாயாவும், முலாயமும் பிரிந்து அரசியல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் லாலு முயற்சி பலிக்குமா, முலாயமுடன் இணைய மாயாவதி முன்வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 20 வருடங்களாக முலாயமும், மாயாவதியும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வரும் நிலையில் பா.ஜ.க.வை எதிர்க்கும் நோக்கில் ஒன்று சேருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications