மும்பை ஏர்போர்ட் மீது பறந்தது வைர நிறுவனத்தின் விளம்பர பலூன்கள்: 2 பேர் கைது
மும்பை: மும்பை விமான நிலையத்தை பீதிக்குள்ளாக்கிய பலூன்கள் வைர நிறுவனம் ஒன்று விளம்பரத்திற்காக பறக்கவிட்டது என்று தெரிய வந்துள்ளது. பொறுப்பில்லாமல் பலூன்களை விமான நிலையம் அருகே பறக்க விட்டது குறித்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் இருந்து அகமதாபாத் கிளம்ப வேண்டியது. அப்போது வானில் 4 பொருட்கள் பறப்பதை பார்த்த விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. அந்த பறக்கும் பொருட்கள் ரிமோட்டில் இயங்கும் பாராசூட்களாக இருக்கும். யாராவது அதை கண்காணிக்க பறக்க விட்டிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இதனால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீன லாந்தர்கள்
மும்பை ஜுஹு கடற்கரையில் வார இறுதி நாட்களில் சீன லாந்தர் விளக்குகள் விற்கப்படும். அந்த விளக்குகளை வாங்கிய யாரோ தான் தவறுதலாக காற்றில் பறக்கவிட்டிருக்கலாம் என்று போலீசார் முதலில் தெரிவித்தனர்.

விளம்பர பலூன்கள்
மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது. அப்போது அந்நிறுவனம் விளம்பரத்திற்காக அந்த பலூன்களை பறக்கவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

கைது
பொறுப்பில்லாமல் விமான நிலையம் அருகே விளம்பர பலூன்களை பறக்க விட்டது தொடர்பாக மும்பை போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்பும் கூட மும்பையில் வானில் சீன லாந்தர் விளக்குகள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை
இது போன்று விளம்பர பலூன்கள் விமான நிலையம் அருகே பறக்கவிடப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விளம்பரத்திற்காக பலூன்களை பறக்க விடுவோருக்கு போலீசார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அச்சுறுத்தல்
விமான நிலையங்களுக்கு ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. அதனால் இது போன்ற விளம்பர பலூன்களை கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications