ஃபேஸ்புக் தோழியை மார்பிங் போட்டோவை காட்டி பணம் கேட்டு மிரட்டிய பி.இ. மாணவர் கைது
மும்பை: மகாராஷ்டிராவில் புகைப்படத்தை ஆபாசமாக இருப்பது போன்று மார்பிங் செய்து ஃபேஸ்புக் தோழியை மிரட்டிய என்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ரைகாட் மாவட்டம் கோபோலி அருகே உள்ள கால்பூரைச் சேர்ந்தவர் பிரத்மேஷ் சலுன்கே(20). அவர் நவி மும்பையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாவது ஆண்டு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். அவர் 15 வயது சிறுமிக்கு ஃபேஸ்புக்கில் பலமுறை பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார்.

அந்த சிறுமி அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்காததால் பிரத்மேஷ் சிறுமியின் ஆண் நண்பர்கள் சிலருடன் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆனார். அதன் பிறகு சிறுமிக்கு மீண்டும் பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தார். சிறுமியும் கடந்த மாதம் அவரது ரெக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து பிரத்மேஷ் சிறுமியுடன் சாட் செய்துள்ளார். திடீர் என்று சிறுமியும் அவரும் நெருக்கமாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படத்தை அனுப்பியுள்ளார். ரூ.7 ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பிரத்மேஷ் மிரட்டினார்.
சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் சார்கோப் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் ஒரு பெண் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி பிரத்மேஷுக்கு பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தனர். அவரும் உடனே ஒப்புக் கொண்டார். அவருடன் பெண் பெயரில் சாட் செய்த போலீசார் நைசாகப் பேசி அவரின் செல்போன் எண்ணை வாங்கினார்.
அவரின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரியை வைத்து போலீசார் பிரத்மேஷை கால்பூரில் வைத்து கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications