தாமரை பொத்தான்கள் கொண்ட சிறப்பு உடை... மோடியின் பதவியேற்பு விழாவுக்காக தயார்
மும்பை: பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் மோடி அணிந்து கொள்வதற்கென பிரத்யேகமான உடை ஒன்று தயாரிக்கப் பட்டுள்ளது.
16-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவுள்ளார்.
விரைவில் நடக்கவுள்ள இந்தப் பதவியேற்பு விழாவில் மோடி அணிந்து கொள்வதற்கென சிறப்பு ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சாய் சுமன்.
இந்த பிரத்யேகமான ஆடை குறித்து சாய் சுமன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் பங்கேற்ற போது, எப்படியும் மோடி பிரதமராகி விடுவார். அவரது பதவியேற்பு விழாவுக்கான சிறப்பு உடையை நாம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
ஜோத்பூரி வகை சூட்...
உடனடியாக மும்பைக்கு பறந்து வந்து, ஜோத்பூரி வகை 'சூட்' ஒன்றினை இதற்காக உருவாக்கினேன்.
தாமரை வடிவ பொத்தான்...
பா.ஜ.க.வின் சின்னமான தாமரை வடிவில் கைவேலைப்பாட்டில் உருவாக்கப்பட்ட பொத்தான்கள் இந்த சூட்டில் இடம் பெற்றுள்ளன.
மோடி ஸ்டைல் உடைகள்...
மோடியின் உடைகளை நான் நீண்ட காலமாக கவனித்து வந்துள்ளேன். அவர் நிறைய நிறங்களையும், பாணிகளையும் விரும்பி அணிபவர். எனது வடிவமைப்பில் உருவான இந்த உடைகளை அவருக்கு பரிசாக அளிக்க உள்ளேன்.
கம்பீர உடை...
'முடியாதது என்று எதுவுமில்லை' என்ற கோட்பாட்டினை இளைஞர்களின் மனதில் பதியவைத்துள்ள அவர், தனது பதவி ஏற்பு விழாவின் போது எனது உடைகளை அணிந்து கம்பீரமாக தோன்றும் காட்சியை காண விரும்புகிறேன்' என இவ்வாறு சாய் சுமன் தெரிவித்துள்ளார்.