10 வயது சிறுவனின் நுரையீரலில் ஸ்க்ரூ: வெற்றிகரமாக அகற்றிய டாக்டர்கள்
மும்பை: மும்பையில் 10 வயது சிறுவன் அப்துல் மொஹ்சினின் நுரையீரலில் ஸ்க்ரூ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள புறநகர் பகுதியான கோவந்தியைச் சேர்ந்தவர் ஆமினாபீ. விதவையான அவரின் மகன் அப்துல் மொஹ்சின்(10) 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் சிறுவனுக்கு மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆமீனா தனது மகனை நான்கு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றும் பலனில்லை.

சிறுவனுக்கு காச நோய் உள்ளது என்று கூறி மருத்துவர் ஒருவர் தெரிவித்ததையடுத்து மொஹ்சினுக்கு காசநோய்க்கான சிகிச்சை கடந்த சில வாரங்களாக அளிக்கப்பட்டது. அப்படியும் சிறுவனுக்கு மூச்சுவிட கஷ்டமாக இருந்தது. இந்நிலையில் தான் ஆமீனா தனது மகனை பரேல் பகுதியில் உள்ள வாதியா மருத்துவமனைக்கு கடந்த 8ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் சிறுவனுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்களை ஆய்வு செய்தனர். அதன் பிறகு புதிதாக ஒரு எக்ஸ்ரேவை எடுத்தபோது தான் சிறுவனின் நுரையீரலில் ஒரு சென்ட்டிமீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள ஸ்க்ரூ ஒன்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மறுநாள் சிறுவனுக்கு பிரான்கோஸ்கோபி முறை மூலம் ஸ்க்ரூவை வெளியே எடுத்தனர்.
இது குறித்து மொஹ்சின் கூறுகையில்,
ஸ்க்ரூவை விழுங்கியதாக எனக்கு நினைவு இல்லை. என்னைப் பற்றிய செய்தியைப் பார்த்து மக்கள் சிரிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் நன்றாக படித்து ஒரு நாள் டாக்டராக ஆவேன் என்றார்.












Click it and Unblock the Notifications