மும்பை நிருபர் பலாத்கார வழக்கு: குற்றவாளி சிராஜ் தப்பிக்கலையாம், சிறையில் தான் இருக்கானாம்
மும்பையில் பெண் புகைப்பட நிருபர் கடந்த மாதம் 22ம் தேதி சக்தி மில்ஸ் வளாகத்தில் மைனர் உள்பட 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜய் ஜாதவ், காசிம் பங்காளி, சலீம் அன்சாரி, சிராஜ் ரஹ்மான்(24) மற்றும் மைனரை கைது செய்து தானே சிறையில் அடைத்தனர்.
இதில் மைனர் மட்டும் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் சிராஜ் ரஹ்மான் தானே சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான். அவன் சிறையில் இருந்து எப்படி தப்பினான் என்றே தெரியவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் ஏராளமான கைதிகள் உள்ள தானே சிறையில் கோப்புகளை பதிவு செய்வதில் ஏற்பட்ட தவறால் சிராஜ் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டதாம்.
ஆனால் உண்மையில் சிராஜ் சிறையில் தான் உள்ளான். இன்று மும்பை நீதிமன்றத்தில் சிராஜை ஆஜர்படுத்த வேண்டி இருந்தது. அப்போது நீதிபதி சிராஜ் எங்கே என்று கேட்டதற்கு எங்களுக்கு தெரியாது குற்றப் பிரிவு போலீசார் பிடியில் அவன் இருப்பான் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மும்பை குற்றப் பிரிவு போலீசாரோ சிராஜ் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.