மேகி நூடுல்சுக்கு விதித்த தடையை நீக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு!!!
மும்பை: மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து, நெஸ்ட்லே நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மேகி நூடுல்சுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட ஆணையை நீக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேகி நூடுல்சில் காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் அதிகளவில் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.
அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் மேகி நூடுல்சுக்கு விதித்த தடையை தொடர்ந்து, மகாராஷ்ட்ரா அரசும் தடை விதித்தது.
இந்த நிலையில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் 'பாதுகாப்பற்றவை' மற்றும் 'மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை' என்று அறிவித்து மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது.
அதை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.
அதில் இந்த உத்தரவு உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய சட்டத்தின் 34-வது பிரிவுக்கு முரணானது என்றும், தன்னிச்சையானது எனவும் கூறப்பட்டிருந்தது. எனவே, மேகி நூடுல்ஸ் மீதான தடையை மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக் கிழமையும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நெஸ்ட்லே இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மேகி நூடுல்சுக்கு விதித்த தடையை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இன்னும் இருவாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் மற்றும் மகாராஷ்ர மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.