உறவுக்கு முயன்ற 'கே' நண்பனை கொலை செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
மும்பை: மும்பையில் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள முயன்ற ஓரினச்சேர்க்கை நண்பனை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசார் பகுதியில் வசித்து வந்தவர் அலெக்சாண்ட்ர் டிசோசா(24). அவர் கடந்த 2012ம் ஆண்டு கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். 2012ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ரயன் கோம்ஸ் என்பவர் தனது நண்பர் அலெக்சாண்டரை தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
அலெக்சாண்டரும் கோம்ஸின் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு 7 மணி அளவில் அலெக்சாண்டர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து கோம்ஸின் வயிற்றில் குத்தினார். ரத்தத்தை பார்த்து பயந்த அவர் கோம்ஸின் அம்மாவுக்கு போன் செய்து ஆம்புலன்ஸை அழைத்து வருமாறு கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோம்ஸ் பலியானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அலெக்சாண்டரை கைது செய்தார். விசாரணையில் கோம்ஸ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதும், அவர் அலெக்சாண்டரை கண்ட இடத்தில் தொட்டதுடன் அவருடன் உறவு கொள்ள முயன்றதும் தெரிய வந்தது. கோம்ஸின் செயலால் அதிர்ச்சி அடைந்த அலெக்சாண்டர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கில் அலெக்சாண்டுருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து டின்டோஷி செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.