மும்பை: கட்டாயமாக பீர் குடிக்க வைத்து 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நண்பர்கள்

மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா( பெயர் மாற்றம்). 16 வயது சிறுமியான இவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார்.
தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்த நிலையில், இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகன் மற்றும் மகளை விட்டுவிட்டு போய்விடவே, சுஷ்மா தனது சகோதரனுடன் வசித்து வந்தார்.
இதனிடையே சுஷ்மாவிற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 20 வயதுக்கு உட்பட்ட 2 பேர் நண்பர்களாக அறிமுகமாகி இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருவரும், கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு சுஷ்மாவைத் தொடர்புகொண்டு, தீபாவளி பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அங்குள்ள 'மாடா' பாலம் அருகே வருமாறு அவர்கள் கூறியதை கேட்டு, அங்கு சென்றார் சுஷ்மா. அங்கு சுஷ்மாவுக்கு ஏற்கனவே அறிமுகமான 2 பேருடன், மேலும் இரண்டு பேர் சேர்ந்துகொண்டு ரேஷ்மாவை கட்டாயமாக பீர் குடிக்க வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் சுஷ்மாவை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இரவு 9 மணியிலிருந்து 11 மணிக்குள் நடைபெற்றுள்ளது. பலாத்கார சம்பவத்திற்கு பின்னர் அந்த 4 பேரும் உணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்து தப்பித்து சுஷ்மா வீட்டிற்கு வந்துவிட்டார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து வீட்டில் தெரிவிக்காத சுஷ்மா, நேற்றுதான் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சுஷ்மாவின் சகோதரர், அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவரை அழைத்துச் சென்று புகார் கொடுக்க வைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகளில் 2 பேர் மீது ஏற்கனவே காவல்நிலையத்தில் சில வழக்குகள் உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்தான் மும்பை சக்தி மில் காம்பவுண்டில் புகைப்படம் எடுக்க சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர், ஒரு கும்பலால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சம்பவத்தின் பாதிப்பு அடங்குவதற்குள், தற்போது 16 வயது சிறுமி அதேப்போன்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications