நிர்வாண செல்பி கேட்டு நச்சரித்த மாப்பிள்ளை... திருமணத்தை நிறுத்தினார் புதுப்பெண்!
மும்பை: மும்பையில் வருங்கால கணவர் நிர்வாண செல்பி கேட்டதால், ஆத்திரமடைந்த கல்யாணப்பெண் கோபத்தில் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார்.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், தானேயில் கால்செண்டரில் பணிபுரிந்து வரும் ஜிதேந்திரா என்ற 33 வயது இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இருவரும் கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினர். தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளனர். அதோடு தங்களது புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில், ஜிதேந்திராவுக்கு திடீரென விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனது வருங்கால மனைவியை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்பது தான் அது. தனது ஆசையை அவர் தனது வருங்கால மனைவியிடமும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், மாப்பிள்ளை விடுவதாக இல்லை. தொடர்ந்து ‘நிர்வாண செல்பி' கேட்டு வருங்கால மனைவியை அவர் நச்சரித்து வந்துள்ளார்.
அதோடு, ரூ. 3 லட்சம் ரொக்கப் பணமும் வரதட்சணையாக அவர் கேட்டுள்ளார். தனது விருப்பப் படி நிர்வாண செல்பி மற்றும் வரதட்சணை தராவிட்டால், திருமணத்தை நிறுத்தி விடப் போவதாகவும் அவர் மிரட்டி வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பெண், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து நடக்க இருந்த திருமணத்தை தானே தடுத்து நிறுத்தினார்.
மேலும் வக்கிர புத்தியுடன் நடந்து கொண்டதாக மாப்பிள்ளை மீது அவர் போலீசிலும் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.