காதலர் தினத்துக்கு கள்ளக்காதலிக்கு பரிசாக மனைவியின் உயிரை கொடுத்த கணவன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது
அகமதாபாத்: அகமதாபாதில் காதலிக்கு காதலர் தின பரிசளிக்கும் விதமாக தனது மனைவியை கொன்ற கணவரை சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் நேற்று போலீஸார் கைது செய்தனர்.
கேரளத்தை சேர்ந்தவர் தருண் ஜீனாராஜ் (28). இவரது மனைவி சஜினி (26) இவர் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இருவருக்கும் கடந்த 2002-ஆம் ஆண்டு திருமணமாகி குஜராத்தின் அகமதாபாத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.
இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தருணுக்கு காதலி இருப்பதாகவும் காதலர் தினத்தில் அவருக்கு தருண் பரிசு கொடுத்ததும் சஜினிக்கு தெரியவந்தது.
[அடடா.. 'அதுக்கு' பயந்து தன் வீட்டை தானே கொளுத்திய இளைஞர்.. எங்க தெரியுமா?]
கட்டுக் கதைகள்
இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது காதலர் தினத்தன்று சஜினி துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீஸார் தருணிடம் விசாரணை நடத்தினர். அப்போது யாரோ கொள்ளையர்கள் வந்து சஜினியை கொன்றுவிட்டதாக கட்டுக் கதைகளை கூறினார்.
சுதாரித்து கொண்டு
இந்த சம்பவத்தை திரும்ப திரும்ப கேட்ட போது முரண்பாடான கருத்துகளை தருண் கூறி வந்ததால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸார் மீண்டும் தன்னிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதை அறிந்து கொண்ட தருண் சுதாரித்து கொண்டு தப்பியோடிவிட்டார்.
அடையாளத்தை திருடி
தன்னுடன் கல்லூரியில் படித்த மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் பட்டாலே என்பவரது அடையாளத்தை திருடி கொண்டார் தருண். இதைத் தொடர்ந்து பிரவீன் என்ற பெயரில் தருண் டெல்லியிலும் புனேவிலும் மென்பொருள் நிறுவனங்கலி பணியாற்றி வந்தார். பின்னர் நிஷா என்பவரை திருமணம் செய்துக் கொண்டு மனைவி, மகன்களுடன் 15 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
விசாரணை
இதனிடையே தருணின் தாயாாிடம் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் என்றும் ஒருவர் அகமதாபாதில் வசிப்பதாகவும் மற்றொருவர் தென் மாநிலத்தில் வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதனால் கேரளாவுக்கும் பெங்களூருவுக்கும் தருணின் தாய் அடிக்கடி பயணம் செய்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரது பெங்களூர் பயணம் குறித்து விசாரணை நடத்தினர்.
போலி அடையாளம்
தருணின் தாய் செல்போனுக்கு பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் இருந்தும், நிஷாவின் செல்போனில் இருந்தும் அழைப்புகள் வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். மென் பொருள் அலுவலகம் சென்று தருணின் பெயரைச் சொல்லி விசாரித்திருக்கிறார். அந்த பெயரில் யாரும் இல்லை என்று தெரிந்ததும், அவரது புகைப்படத்தைக் காட்டியுள்ளார். அப்போதுதான், தருண் தனது பெயரை மாற்றிக் கொண்டு பிரவீனாக உலா வந்தது தெரியவந்திருக்கிறது.
காதலிக்கு பரிசளிக்க
போலீசாரின் குற்றசாட்டுகளை முதலில் மறுத்த தருண், அதன்பின் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தருண் என்ற பிரவீனின் வாழ்க்கை தொடர்பான அனைத்து உண்மைகளும் நிஷாவுக்குத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. காதலிக்கு காதலர் தினப் பரிசு அளிப்பதற்காக மனைவியை தருண் கொன்றதும் தெரியவந்துள்ளது.