குஜராத் பால விபத்தில் 50 பேரை காப்பாற்றிய முஸ்லீம் இளைஞர்.. வெளியான உருக்கமான தகவல்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மோர்பி கேபிள் பாலம் ஒன்று அறுந்து விழுந்ததில் 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க இரண்டு இஸ்லாமியர்கள் பெரும் உதவி செய்துள்ளனர். இதில் ஒருவர் நீச்சல் வீரராவார்.
இவர்கள் இருவரையும் குஜராத் மாநில பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. தற்போது சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் குறித்த செய்தி தீயாய் பரவி வருகிறது.

விபத்து
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிக பழமையான கேபிள் பாலம் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை 'ஒரேவா' எனும் தனியார் நிறுவனம் சமீபத்தில் புனரமைத்து கடந்த 26ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான 30ம் தேதியன்று புதியதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க அதிக அளவு மக்கள் குவிந்துள்ளனர். சுமார் 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்பதற்குள் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கின.

உயிரிழப்பு
சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் 97 பேர் உயிரற்ற வெறும் உடல்களாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதையடுத்து பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் மேலாளர் இருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை அறிவித்தார். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மீட்புப் பணி
விபத்து ஏற்பட்டபோது பாலத்தில் சுமார் 500 பேர் வரை இருந்துள்ளனர். இதில் ஆற்றில் விழுந்தது 350 பேர், உயிரிழந்தது 141 பேர். மீதமுள்ளவர்களை பத்திரமாக மீட்க கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்த மீட்பு பணியில் இரண்டு இஸ்லாமியர்கள் பெரும் உதவி செய்துள்ளனர். தற்போது இது தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன. சம்பவத்தன்று மோர்பியில் உள்ள மருத்துவமனையில் தனது மகளை பிரசவத்திற்காக சேர்த்திருந்தார் தௌஃபீக் பாய். அப்போது சிலர் உடல்களை ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தனர்.

இஸ்லாமியர்கள்
அப்போதுதான் அவருக்கு விபத்து குறித்து தெரிந்துள்ளது. விபத்தை கேள்விப்பட்டவுடன் தௌஃபீக் பாய் உடனடியாக ஆற்றை நோக்கி ஓடியுள்ளார். அங்கு தப்பியவர்களை மீட்க உதவியுள்ளார். சுமார் 35 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இவர் பேருதவி செய்திருக்கிறார். இது குறித்து உள்ளூர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்த நேரத்தில் நமக்கு சாதி-மதம் தேவையானது அல்ல. மனிதாபிமானம்தான் தேவையானது" என்று கூறியுள்ளார். அதேபோல இதில் உதவிய மற்றொரு நபர், நீச்சல் வீரர் ஹுசைன் பதான். இவர் ஆற்றில் குதித்து தனது உயிரையும் பொருட்படுத்தாது 50 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தற்போது இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது












Click it and Unblock the Notifications