கார்கில் வெற்றிக்கு காரணமே முஸ்லிம் ராணுவ வீரர்கள் மட்டுமே.. ஆசாம் கானின் சர்ச்சை பேச்சு!
லக்னோ: கார்கில் போரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு காரணம் ராணுவத்தில் உள்ள முஸ்லிம் வீரர்கள்தான் என்று சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் ஆசாம் கான் பேசிய பேச்சு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் உ.பி. அமைச்சருமான ஆசாம் கான் காசியாபாத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், பாகிஸ்தானிடம் இருந்து கார்கிலை மீட்டுக் கொடுத்தது ராணுவத்தில் உள்ள முஸ்லிம் வீரர்கள்தான் என்று கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு காசியாபாத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கார்கில் வெற்றி இந்தியர்களுடையதே தவிர எந்த ஒரு சமூகத்துக்கும் உரியது அல்ல என்றார்.
இதற்கு முன்னர் பாஜக பொதுச்செயலர் அமித் ஷாவை ரவுடி நம்பர் 1 என்று பேசி சர்ச்சையை உருவாக்கியிருந்தார் ஆசாம் கான் என்பது குறிப்பிடத்தக்கது.