என் தந்தை மோசமானவர், அம்மாவை தினமும் அடிப்பார்: கட்டுரையில் குறிப்பிட்ட 5ம் வகுப்பு மாணவி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 5ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கட்டுரையில் தனது தந்தை மோசமானவர் என்று எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சால்ட் லேக் நகரில் இருக்கும் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவ, மாணவியரை 'என் குடும்பம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு ஆசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து மாணவி ஒருவர் எழுதிய கட்டுரை ஆசிரியரை அதிர்ச்சி அடைய வைத்தது.
அந்த மாணவி தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது,
என் தந்தை மோசமானவர். அவர் என் அம்மாவை தினமும் அடித்துக் கொடுமைப்படுத்துவார். நானும், என் அம்மாவும் தினமும் இரவில் அழுவோம். எங்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. என் மாமாக்கள் கூட கண்டுகொள்வது இல்லை.
தந்தை என்னையும் அடிப்பார். இது தான் என் குடும்பம். நான் வளர்ந்த பிறகு என் அம்மாவை தந்தையிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்வேன் என்று எழுதியுள்ளார்.
இதை பார்த்த ஆசிரியர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார்.