பழிக்குப் பழி வாங்க 20 மியான்மர் தீவிரவாதிகள் ஊடுறுவல்.. ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
டெல்லி: மியான்மருக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை இந்தியப் படையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பழிக்குப் பழி நடவடிக்கையில் இறங்கத் திட்டமிட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். அனைத்து வட கிழக்கு மாநிலங்களும் இதுதொடர்பாக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மியான்மர் விவகாரம் தொடர்பாகவும், நாட்டின் எல்லைப்புற பாதுகாப்பு தொடர்பாகவும், பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் முடிவில், வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். எனவே அனைத்துத் தரப்பும் உஷாராக இருக்க வேண்டும் என்ற செய்தியை மத்திய அரசு வெளியிட்டது.

வட கிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பை அதிகரிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா ராணுவத்தை பழிவாங்குவதற்காக 15 முதல் 20 தீவிரவாதிகள் வரை இந்தியாவுக்குள் ஊடுறுவியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வடகிழக்கில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்ப[டுகிறது.
மேலும் வட கிழக்கைச் சேர்ந்த 4 முதல் 5 தீவிரவாத குழுக்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்கு தெற்கு கிழக்கு ஆசிய புரட்சி படை என்ற பெயரில் இவர்கள் இணைந்து செயல்படவுள்ளனராம். உல்பா அமைப்பின் மூத்த தலைவரான பரேஷ் பரூவாதான் இவர்களுக்கு தாக்குதல் உள்ளிட்ட திட்டங்களில் உதவி செய்து வருவதாகவும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications