மிசோரம் எல்லையில் மியான்மர் நகரை கைப்பற்றிய கிளர்ச்சி குழு- இந்தியாவின் அத்தனை முதலீடுகளின் கதி?
அய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் எல்லையில் மியான்மர் நாட்டின் மிக முக்கியமான பலேத்வா நகரை கிளர்ச்சி குழுவான அரக்கான் ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. இந்தியா- மியான்மர் இடையேயான இணைப்பு நகரமான பலேத்வாவை கிளர்ச்சி குழு கைப்பற்றியிருப்பதால் அப்பகுதியிலான இந்தியாவின் பல கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு என்னவாகும் என கேள்வி எழுந்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக 3 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தியாவை ஒட்டிய மியான்மர் பகுதிகளில் அரக்கான் ராணுவம் என்ற கிளர்ச்சி குழுவின் கை ஓங்கி இருக்கிறது. இதனால் மியான்மர் ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் தப்பி ஓடி தஞ்சமடைந்தனர். அவர்கள் பாதுகாப்பாக மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் மியான்மர்- இந்தியா இடையேயான சாலையில் உள்ள முக்கிய நகரமான பலேத்வா இப்போது அரக்கான் ராணுவம் என்கிற கிளர்ச்சி குழு வசமாகியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு மிசோரம் எல்லையில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. பலேத்வா நகரை மையமாக வைத்து இந்தியா பெருமளவு முதலீடும் செய்துள்ளது.
கடந்த ஆண்டு மியான்மரின் சிட்வே துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தியது. மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்தையும், இந்தியாவின் மிசோரம் மாநிலத்தையும் இணைக்கும் கலடன் ஆற்றின் மீது பல அடுக்கு போக்குவரத்து வசதியை உருவாக்க இந்தியா- மியான்மர் இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் சிட்வே துறைமுகம் உருவாக்கப்பட்டது. இந்த துறைமுகமானது தற்போது கிளர்ச்சியாளர்கள் வசமாகி இருக்கும் பலேத்வாவை உள்நாட்டு நீர்வழி வழியாகவும், இத் திட்டத்தின் ஒரு பகுதியாக பலேத்வாவிலிருந்து மிசோரமில் உள்ள சோரின்புய் வரை சாலை வழியாகவும் இணைக்கக் கூடியது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பலேத்வா நகரம் தற்போது கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கி இருப்பது இந்தியாவின் திட்டங்களுக்கும் முதலீடுகளுக்கும் பேராபத்தாகவும் நெருக்கடியைத் தரக் கூடியதாகவும் உருமாறும் என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications