மைசூரில் சில்மிஷம் செய்தவரை அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்த 'தில்' பெண்
மைசூர்: மைசூரில் தன்னை பின்தொடர்ந்து வந்து உறவுக்கு அழைத்த வாலிபரை எம்.பி.ஏ. படித்துவிட்டு சினிமா துறையில் பணியாற்றும் பெண் ஒருவர் அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்துள்ளார்.
மைசூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழியர் லோகநாத்தின் மகள் சைத்ரா. எம்.பி.ஏ. படித்துள்ள அவர் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் தங்கி சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு மைசூருக்கு சென்ற அவர் பெங்களூர் திரும்ப திங்கட்கிழமை பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். சென்று பணம் எடுத்த சைத்ரா பேருந்து நிலையம் வரும் வரை அவரை முகமது சமீர்(31) என்பவர் பின்தொடர்ந்து வந்ததுடன் உறவுக்கும் அழைத்துள்ளார்.
சைத்ரா அவரது பேச்சை கேட்காதது போன்று செல்ல முயன்றார். அப்போது சமீர் சைத்ராவின் கையை பிடித்து இழுத்துள்ளார். உடனே அவர் சமீரை கன்னத்தில் அறைந்தார். அடி வாங்கிய சமீர் சைத்ராவை தகாத வார்த்தைகளால் திட்டினார். சைத்ரா அங்கு கிடந்த ஸ்டீல் பைப்பை எடுத்து சமீரை அடித்தார். அடிதாங்க முடியாமல் ஓடிய சமீர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து சைத்ராவை தேடினார்.
பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த சைத்ராவை பார்த்த சமீர் மீண்டும் திட்டினார். இம்முறை சைத்ரா சமீரை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இத்தனை நடந்தும் பேருந்து நிலையத்தில் நின்ற ஒருவர் கூட சைத்ராவுக்கு உதவிக்கு வரவில்லை.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சமீரை கைது செய்தனர். மேலும் சைத்ராவின் துணிச்சலை பாராட்டி மைசூர் போலீஸ் கமிஷனர் அவருக்கு ரொக்கமும், சான்றிதழும் வழங்கினார்.
கடந்த வாரம் ஹரியானா மாநிலம் ரோதக்கில் அரசு பேருந்தில் கிண்டல் செய்த 3 வாலிபர்களை 2 சகோதரிகள் அடித்து நொறுக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications