வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்... பறவைகளா, பிசாசா ? நெல்லூர் மக்கள் பீதி!
நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வானில் விநோத உருவங்கள் வட்டமிடுவதாக பரவிய தகவலால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். காரணம், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக கூறப்படுகிறது.
முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகளாக இருக்கும் என நினைத்த பொதுமக்கள், பின்னர் அவை மனித உருவத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மிக உயரத்தில் பறக்கும் இந்த விநோத உருவங்கள் திடீரென பூமிக்கு வெகு அருகில் வருவதாகவும், பின்னர் அவை மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், இரண்டு உருவங்கள் பறவைகள் போன்ற தோற்றத்துடன் வானில் பறப்பது பதிவாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோ தெளிவற்றதாக இருப்பதால், அது பறவைகள் தானா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை.
இவ்வாறு வானில் தோன்றும் விநோத உருவங்களை சிலர் பேய், பிசாசு என்றும், சிலர் தேவ தூதர்கள் எனவும் கூறி வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் அஞ்சி, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.












Click it and Unblock the Notifications