ரயில் விபத்தில் காயமடைந்தவர்களிடம் செல்லாத நோட்டுக்களைக் கொடுத்த "அதிகாரிகள்"!
உ.பி. ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிலர் அதிகாரிகள் என்று கூறி செல்லாத 500 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாட்னா- இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்களிடம் அதிகாரிகள் என்ற பெயரில் சிலர் இழப்பீடு என்று கூறி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் அருகே பொக்ரியான் என்ற இடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 121 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கான்பூர் மாவட்டம் மதி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அணுகிய சிலர் செல்லாத 500 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இழப்பீடு என்று கூறி கொடுத்துள்ளனர். இதை வாங்கிய நோயாளிகள் ஏன் செல்லாத நோட்டுக்களைக் கொடுத்தார்கள் என்று குழம்பிப் போய் விட்டனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இப்திகாருதீனுக்குப் புகார் போனது. அவர் இதுகுறித்துக் கூறுகையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். மதி (Mati) மருத்துவமனையில் மட்டும்தான் இப்படிக் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. சிலர் வந்து காயமடைந்தவர்களுக்கு தலா 5000 ரூபாயைக் கொடுத்துள்ளனர். அது அனைத்துமே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளாகும்.
ரயில்வேயிலிருந்து இந்த நிதி கொடுக்கப்படுவதாக கூறி கொடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் ரயில்வேயிலிருந்து இப்படி யாரும் நிதி கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர் என்றார்.
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த ஆர்.பி. சிங் என்பவர் கூறுகையில் யார் இந்தப் பணத்தைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ரயில்வே ஊழியர்களா அல்லது அரசியல் கட்சியினரா என்று தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் டிட்டரில் கேட்டபோது இதுகுறித்து விசாரிப்பதாக அவர் பதிலளித்தார் என்றார்.
மக்களின் காயத்தில் யார் இப்படி உப்பைப் போட்டது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications