நாகாலாந்தில் பதற்றம் நீடிப்பு- இணையதளம், எஸ்.எம்.எஸ். சேவைகள் நிறுத்தம்!
திமாப்பூர்: பாலியல் பலாத்கார குற்றவாளி ஒருவனை வீதியில் பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் நாகாலாந்து மாநிலத்தில் இணைய தளங்கள், எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் நாகா இன இளம்பெண் ஒருவரை காரில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்ததாக பரீத்கான் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் திமாப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

கடந்த வியாழன் அன்று சிறையின் முன் திரண்ட நாகா இனத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் பலாத்கார குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென அவர்கள் திமாப்பூர் சிறையை உடைத்து உள்ளே புகுந்து குற்றவாளி பரீத்கானை வெளியில் இழுத்து வந்து நிர்வாணமாக்கி, சித்ரவதை செய்தனர்.
இந்த கொலைவெறித் தாக்குதலில் உயிரிழந்த பரீத்கான் பிரேதத்தை தரதரவென இழுத்துச் சென்று அருகிலுள்ள சந்திப்பு ஒன்றில் தொங்க விட்டனர்.

மக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக திமாப்பூர் மத்திய சிறைத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
உள்துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் நாகலாந்து மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம், எஸ்.எம்.எஸ். சேவைகள் ஆகியவை 48 மணிநேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications